மேலூரில் பெண்ணை கத்தியால் குத்திய கணவர் கைது

மேலூரில் பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்,
சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்குளத்தை சேர்ந்தவர் முத்துவீரன் (வயது 32). இவருக்கும், கட்டானிபட்டியை சேர்ந்த கல்யாணிக்கும் (29) திருமணமாகி 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மேலூரில் ஆஸ்பத்திரிக்கு சென்ற கல்யாணிக்கு பணம் கொடுப்பதற்காக அவரது கணவர் முத்துவீரன் அங்கு வந்துள்ளார்.
அப்போது திடீரென அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த முத்துவீரன் சாலையோரம் இருந்த செருப்பு தைக்கும் கடையில் இருந்து கத்தியை எடுத்து வந்து கல்யாணியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முத்துவீரனை கைது செய்தனர். காயம் அடைந்த கல்யாணியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story