பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

பணம், பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகிறதா? என்று பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விழுப்புரம்,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணமோ அல்லது பரிசு பொருட்களோ கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அரசு அலுவலர், ஒரு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 ஏட்டுகள் என 5 பேர் பணியில் இருப்பார்கள். இந்த குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருந்து முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தீவிர சோதனை
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 21 பறக்கும் படை குழுக்களும், 21 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்குபடை அலுவலர் மணிவாசகம் தலைமையிலான குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குழுவினர் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ, வேன், லாரி, சரக்கு வாகனம், மினி லாரி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள் என அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story