குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்

குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரம்
குடிமங்கலம்:-
குடிமங்கலம் பகுதியில் பொரியல் தட்டை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொரியல்தட்டை சாகுபடி
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் கிணற்றுப்பாசனம் மூலம் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தட்டை பயறு, பீன்ஸ் வரிசையில் பொரியல் தட்டை உணவுப்பயிராகும். கேரள மாநிலத்தில் அவியல், பொரியல், கூட்டு என உணவில் அதிகளவு பயன்படுத்தப்படுவதால் குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டை கேரளா மாநிலத்திற்கு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பொரியல் தட்டை சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. பொரியல் தட்டை 60 நாட்களில் அறுவடைக்கு வரும் என்பதால் விவசாயிகள் பொரியல் தட்டை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடிமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் பொரியல் தட்டை உடுமலை, பொள்ளாச்சி பகுதி மட்டுமின்றி கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால் கூடுதல் விலை கிடைத்து வருகிறது.
கூடுதல் விலை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பொரியல் தட்டை அனைத்து வகை நிலங்களிலும் அனைத்துப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம். குளிர்சீதோஷண நிலை உள்ள பகுதிகளில் கூடுதல் மகசூல் கொடுக்கும். விதைப்பு செய்த 50-வது நாள் முதல் காய்கள் தினமும் பறிக்கலாம். ஏக்கருக்கு தினமும் 80 கிலோ முதல் 100 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஒரு ஏக்கருக்கு உழவு, களைஎடுத்தல். மருந்து தெளித்தல், உரமிடுதல் என ரூ.20 ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் கொடுக்கும். பொரியல் தட்டைக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளதால் சீரான விலை கிடைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story