பழுதான மின்மாற்றியை சீரமைக்ககோரி பொதுமக்கள் சாலைமறியல்


பழுதான மின்மாற்றியை சீரமைக்ககோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 26 March 2021 7:03 PM GMT (Updated: 26 March 2021 7:03 PM GMT)

கறம்பக்குடி அருகே பழுதான மின் மாற்றியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி, மார்ச்.27-
கறம்பக்குடி அருகே பழுதான மின் மாற்றியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழுதான மின்மாற்றி
கறம்பக்குடி அருகே மைலன்கோன் விடுதி ஊராட்சி  ஆயர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளமின்மாற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழுதானது. இதனால் இப்பகுதி மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கறம்பக்குடி மின்வாரியத்திற்கு புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு மின்மாற்றியில் இருந்து ஆயர் தெருவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் மின் மோட்டார்கள் இயங்கவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
மேலும் குறைந்த மின் அழுத்த பிரச்சினையால் மின்சாதனங்களை இயக்க முடியவில்லை. எனவே பழுதான மின்மாற்றியை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் மின்வாரிய அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மருதன் கோன்விடுதி நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், கறம்பக்குடி மின்வாரிய உதவி பொறியாளர் மகாதேவராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது மின்மாற்றியை உடனடியாக பழுதுநீக்கி மின்சாரம் வினியோகிக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story