சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக் கொலை


சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக் கொலை
x
தினத்தந்தி 26 March 2021 9:06 PM GMT (Updated: 26 March 2021 9:06 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில், மார்ச்:
சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரியை அடித்துக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாட்டு வியாபாரி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் தமிழன் (வயது 55). மாட்டு வியாபாரியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் நேற்று அதிகாலையில் சங்கரன்கோவில்-நெல்லை மெயின் ரோடு வேப்பங்குளம் விலக்கு அருகில் சாலையோரம் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அடித்துக் கொலை

அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து சின்ன கோவிலான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த தமிழனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தமிழனை மர்மநபர்கள் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. அவரை கொலை செய்தவர்கள் யார்?, முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா?. தமிழனை வேறு எங்கேனும் அடித்துக் கொலை செய்து விட்டு, உடலை சாலையோரம் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

சாலைமறியல்

இதற்கிடையே தமிழனை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, அவருடைய உறவினர்கள் சங்கரன்கோவில் தேரடி திடல் அருகில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களை சங்கரன்கோவில் டவுன் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சங்கரன்கோவில் அருகே மாட்டு வியாபாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story