பவானி அருகே பஞ்சு அரவை மில்லில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள்- பஞ்சு எரிந்து நாசம்


பவானி அருகே பஞ்சு அரவை மில்லில் பயங்கர தீ விபத்து; எந்திரங்கள்- பஞ்சு எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 April 2021 4:09 AM IST (Updated: 13 April 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசம் ஆனது.

பவானி
பவானி அருகே பஞ்சு அரவை மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசம் ஆனது. தீ விபத்து
இடி, மின்னலுடன் மழை
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு வசந்தம் பாரடைஸ் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 53). இவர் சித்தோடு வாய்க்கால் மேடு பச்சபாளி பகுதியில் பஞ்சு அரவை மில் நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணி அளவில் பவானி, சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் சூறாவளிக்காற்று வீசியது. இதைத்தொடர்ந்து மழையும் பெய்தது.
தீ விபத்து
அப்போது வீசிய சூறாவளிக்காற்றில் பஞ்சு அரவை மில்லில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு தீப்பொறிகள் பறந்ததாக கூறப்படுகிறது. 
இதன்காரணமாக மில்லின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே இதுபற்றி ஈரோடு, பவானி, பெருந்துறை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
3 மணி நேரம்
தகவல் அறிந்ததும் ஈரோடு, பவானி, பெருந்துறை தீயணைப்பு வீரர்கள் 3 வண்டிகளில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு  வந்தனர். 
எனினும் இந்த தீ விபத்தில் மில்லில் உள்ள எந்திரங்கள் மற்றும் பஞ்சு எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story