அ.தி.மு.க.பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை


அ.தி.மு.க.பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 5:44 AM GMT (Updated: 15 April 2021 9:09 AM GMT)

சுசீந்திரம் அருகே அ.தி.மு.க. பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர், 

சுசீந்திரம் அருகே அ.தி.மு.க. பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.அவரது சாவுக்கான காரணம் குறித்து கடிதம் சிக்கியதாக பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. பெண் நிர்வாகி

சுசீந்திரம் அருகே ராமபுரம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் முரளிகாந்த் (வயது 45). இவருக்கும், தோவாளை புதூரை சேர்ந்த சரிதா (38) என்பவருக்கும் 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சரிதா அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளராக உள்ளார்.

இவர்களுக்கு அபிஷேக் (17) என்ற மகனும், அபிஷா (16) என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு முரளிகாந்த் மனைவி ஊரான தோவாளை புதூரில் வசித்து வந்தார். பின்னர் முரளிகாந்த் குவைத் நாட்டுக்கு சென்று வேலை பார்த்தார். 

தற்கொலை

இந்தநிலையில், முரளிகாந்த் கடந்த ஜனவரி மாதம் குவைத்தில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார். மனைவி ஊரான தோவாளை புதூரில் தங்கி வந்தார். முரளிகாந்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மனம் உடைந்த முரளிகாந்த் சொந்த ஊரான கொத்தன்குளத்தில் உள்ள தம்பி வீட்டுக்கு வந்தார். மன  வருத்தத்தில் இருந்த முரளிகாந்த் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்ததாக தெரிகிறது. அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தார். அப்போது முரளிகாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 கடிதம் சிக்கியதாக பரபரப்பு

இதுகுறித்த புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்ஆறுமுகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முரளிகாந்த் தற்கொலை செய்வதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும், அதில் தனது சாவுக்கு காரணமானவர்கள் குறித்து பரபரப்பு தகவலை குறிப்பிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

Next Story