இந்தியாவிலேயே பாதிப்பில் முதலிடம் பெங்களூருவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் 300 கொரோனா நோயாளிகள் அதிர்ச்சி தகவல்

இந்தியாவிலேயே பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ள பெங்களூருவில், ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் 300 கொரோனா நோயாளிகள் இருக்கும் அதிர்ச்சி தகவல் வௌியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா சுனாமி போல் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பெங்களூருவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1½ லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன்படி பார்த்தால் பெங்களூருவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் சுமார் 300 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது நகரவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் பெரு நகரங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூருவில் தான் வைரஸ் பரவல் மற்றும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து கொரோனா கண்காணிப்பு அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், "சீனாவின் உகான் நகரில் தான் இந்த கொரோனா பிறந்தது. அந்த நகரம் நிலப்பரப்பில் பெங்களூருவை விட 8 மடங்கு பெரியது. ஆனால் இரு நகரங்களிலும் மக்கள்தொகை ஏறத்தாழ சரிசமமாகத்தான் உள்ளது. பெங்களூருவில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது" என்றார்.
தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் கூறுகையில், "கர்நாடகத்தில் 20 வகையான உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் உள்ளன. இங்கு பரவல் அதிகமாக இருக்க, வைரஸ் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்துவது தான் காரணம்" என்றார்.
பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரி டாக்டர் பி.எஸ்.ரங்கநாத் கூறுகையில், "பெங்களூருவில் குடிசை பகுதிகளில் மக்கள் நெருக்கம் அதிகம். அங்கு அதிக மக்கள் ஒரே கழிவறையை பயன்படுத்துகிறார்கள். அங்கு தூய்மை கிடையாது. ஆயினும் அந்த குடிசை பகுதிகளில் கொரோனா பரவல் மிக குறைவாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அந்த குடிசை பகுதிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தடுப்பூசி போட சென்றால் ஒருநாள் கூலி போய்விடும் என்று கருதுகிறார்கள். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story