திருவாரூர் மாவட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன


திருவாரூர் மாவட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 26 April 2021 11:47 PM IST (Updated: 26 April 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 9 திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் குறைந்தபட்ச பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்;
கொரோனா பரவல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 9 திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும் குறைந்தபட்ச பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
9 தியேட்டர்கள் மூடப்பட்டன
கொரோனா நோய் தொற்று தீவிரம் காரணமாக மக்கள் அதிக கூடும் இடங்களை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு சினிமா தியேட்டர்களை மூட உத்தரவிட்டது. அதன்படி திருவாரூர் நகரில் அமைந்துள்ள 2 தியேட்டர்கள், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 9 தியேட்டர்கள் நேற்று மூடப்பட்டன. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிரமம்
இதுகுறித்து திருவாரூரில் உள்ள தியேட்டர் உரிமையாளர் செந்தில் கூறியதாவது:-  சினிமா தொழில் ஏற்கனவே பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. கொரோனாவால் கடந்த ஆண்டு தியேட்டர்கள் மூடப்பட்டதால் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.  இந்தநிலையில் மீண்டும் சினிமா தியேட்டர்களை மூடுவதால் தியேட்டர் உரிமையாளர்கள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.
குறைந்த பட்ச பாவையாளர்கள்
இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கையில் தான் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
மேலும் முககவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தியேட்டரை மூடினாலும் தொழில் வரி உள்பட அனைத்து வரிகளும் செலுத்த வேண்டியுள்ளது. இதில் விதிவிலக்கு அளிப்பதில்லை. மாதத்துக்கு குறைந்தபட்ச மின் கட்டணமாக ரூ.20 ஆயிரம் வரை கட்ட வேண்டியுள்ளது.
எனவே சினிமா துறை மீது அரசு கவனம் செலுத்தி குறைந்தபட்ச பார்வையாளர்களை கொண்டு தியேட்டர்கள் இயங்கு அனுமதி அளிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story