கோடநாடு வழக்கில் கைதான மனோஜ் உள்பட 2 பேருக்கு கொரோனா


கோடநாடு வழக்கில் கைதான மனோஜ் உள்பட 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 11:44 PM GMT (Updated: 1 May 2021 11:44 PM GMT)

குன்னூர் கிளை சிறையில் கோடநாடு வழக்கில் கைதான மனோஜ் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குன்னூர்

குன்னூர் கிளை சிறையில் கோடநாடு வழக்கில் கைதான மனோஜ் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

குன்னூர் சிறையில் அடைப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்குள்ள பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சயான், மனோஜ் ஆகியோர் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். மற்ற 8 பேர் ஜாமீனில் உள்ளனர். வழக்கு விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு சயான், மனோஜ் ஆகியோர் அழைத்து வரப்படுவது வழக்கம். 

கொரோனா தொற்று

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி மனோஜிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தவிர அங்கு மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது சிறைக்காவலர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் குன்னூர் கிளை சிறையின் வாயில்கள் மூடப்பட்டு உள்ளது. அங்கு அடைக்கப்பட்டு உள்ளவர்கள் வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.


Next Story