விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கொடைக்கானல் அருகே விவசாய பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம், புலியூர், பாரதி அண்ணா நகர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. இவை அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
மேலும் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை அவ்வப்போது அச்சுறுத்துகின்றன.
இதற்கிடையே காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்கும் வகையில், வனப்பகுதியையொட்டி அகழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கதையாகி விட்டது.
இந்தநிலையில் பாரதி அண்ணாநகர் பகுதிக்குள், 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் நேற்று புகுந்தன. பின்னர் அவை தோட்டங்களில் பயிரிட்டிருந்த வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும், முரசு கொட்டியும் யானைகளை விரட்டினர்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக, வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story