விழுப்புரம் பகுதியில் ஊரடங்கை மீறி இயங்கிய 13 கடைகளுக்கு அபராதம்


விழுப்புரம் பகுதியில் ஊரடங்கை மீறி இயங்கிய 13 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 22 May 2021 4:07 PM GMT (Updated: 22 May 2021 4:07 PM GMT)

விழுப்புரம் பகுதியில் ஊரடங்கை மீறி இயங்கிய 13 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் வளவனூர், காணை, கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் முழு ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் வினோத்குமார், வருவாய் ஆய்வாளர் சிவசக்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

13 கடைகளுக்கு அபராதம்

அப்போது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் ஒரு இரும்புக்கடை, கம்பன் நகர் பகுதியில் டீக்கடை, இனிப்பு கடை, விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஹார்டுவேர்டு கடை, மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் உள்ள அரிசி கடை ஆகிய 5 கடைகள் அனுமதி வழங்கப்படாத நிலையில் முழு ஊரடங்கை மீறி திறக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த அதிகாரிகள், அந்த 5 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.500-ஐ அபராதமாக விதித்தனர்.இதேபோல் விழுப்புரம் அருகே கோலியனூர், வளவனூரில் தலா ஒரு ஆட்டோ மொபைல் கடை, வளவனூர் கடைவீதியில் 2 அரிசி கடைகளும், நன்னாட்டில் வாழை இலை விற்பனை கடையும், கண்டமங்கலம் அருகே பாக்கம் கூட்டுசாலையில் பிளாஸ்டிக் குழாய்கள் விற்பனை கடை, அடகு கடை, சிமெண்டு கடை ஆகிய 8 கடைகள் அனுமதி வழங்கப்படாத நிலையில் திறக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் அடகு கடைக்கு ரூ.10 ஆயிரமும், பிளாஸ்டிக் குழாய்கள் விற்பனை கடைக்கு ரூ.5 ஆயிரமும், சிமெண்டு கடைக்கு ரூ.1,000-ம், மற்ற 5 கடைகளுக்கு தலா ரூ.500-ம் அபராதமாக அதிகாரிகள் விதித்தனர். மீண்டும் ஊரடங்கை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story