காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள் பயன்பாட்டுக்கு வாடகையின்றி டிராக்டர்; அதிகாரி தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான எந்திரங்களின் புழக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு, ஊரடங்கு காலத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் ஆகியவை இணைந்து மாஸே பெர்குசன், ஜஷர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு உழவு பணிகளை மேற்கொள்வதற்காக 60 நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக உபயோகப்படுத்திகொள்ள வழங்க உள்ளது.
விவசாயிகள் இந்த சேவையை பெற உழவன் செயலியில் உள்ள வேளாண் எந்திர வாடகை சேவை மூலமாகவோ அல்லது டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சேவை மையத்தில் 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது இந்த சேவைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் டேனியல் -95006 91658 கைப்பேசி எண்ணிலோ, காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்ட தேவன் 9994460153 கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரங்கள் தேவைப்படும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.