கர்ப்பிணியான காதல் மனைவியை கொன்ற வாலிபர் கைது

கர்ப்பிணியான காதல் மனைவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஹாசன்:
அரிசிகேரே தாலுகாவில், கர்ப்பிணியான காதல் மனைவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காதல் திருமணம்
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா நாராயணா கட்டள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா(வயது 22). இவரது கணவர் அதே கிராமத்தைச் சேர்ந்த புட்டசாமி என்ற சரத்(25). இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதில் சரோஜா தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். சரத், குருப சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருமணமான புதிதில் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே சரோஜா கர்ப்பிணியானார். தற்போது அவர் 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.
இதையடுத்து அவர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவரை சரத் சமாதானம் செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சரத், கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவி சரோஜாவை அடித்து, உதைத்தார்.
இதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதையடுத்து சரத், வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து சரோஜாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுபற்றி அரிசிகெரே புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
பின்னர் சரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story