கொரோனாவுக்கு 8 பேர் சாவு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 8 பேர் இறந்தனர். மேலும் புதிதாக 521 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 36,234 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 262 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 30,819 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 5,153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரும், திருவெண்ணைநல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூரை சேர்ந்த 55 வயதுடைய நபரும், விழுப்புரம் அருகே தென்னமாதேவிமேடு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரும், மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செஞ்சி என்.ஆர்.பேட்டை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரும், விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே அத்தியூர்திருக்கையை சேர்ந்த 56 வயதுடைய நபரும், மேல்மலையனூர் அருகே தாயனூரை சேர்ந்த 58 வயது நபரும், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருவெண்ணைநல்லூரை சேர்ந்த 73 வயதுடைய முதியவரும் ஆக மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 262-ல் இருந்து 270 ஆக உயர்ந்துள்ளது.
521 பேருக்கு தொற்று
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 521 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,755 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 683 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 31,502 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 4,983பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story