113-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எழும்பூர் ரெயில் நிலையம் ஊழியர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்


113-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எழும்பூர் ரெயில் நிலையம் ஊழியர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்
x
தினத்தந்தி 12 Jun 2021 5:27 AM GMT (Updated: 12 Jun 2021 5:27 AM GMT)

எழும்பூர் ரெயில் நிலையம் நேற்று 113-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. ஊழியர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்

சென்னை, 

சென்னை ரெயில்வே முனையங்களில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக திகழும் இந்த ரெயில் நிலையம் ஒரு நூற்றாண்டு கடந்து பல்வேறு சாதனைகளை படைத்து, தற்போது கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. இந்த ரெயில் நிலையம் 1908-ஆம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் என்ஜினீயராக ஹென்றி இர்வின் இருந்தார். இந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரராக சாமிநாத பிள்ளை என்பவர் செயல்பட்டார். ரூ.17 லட்சம் செலவில் 300 அடி நீளம், 71 அடி அகலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

தரைத்தளம், முதல் தளத்துடன் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையம் கட்டி முடிந்த பிறகு, எழும்பூரில் இருந்து தனுஷ்கோடிக்கு போர்ட் மெயில் ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகளும், ஒரு நடைமேம்பாலமும் இருந்தது. அதன்பிறகு, பல்வேறு காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்து, இப்போது 12 நடைமேடைகள் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள 70 ரெயில் நிலையங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தலா ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்ய ரெயில்வே வாரியம் அறிவித்தது. இதில், எழும்பூர் ரெயில் நிலையமும் ஒன்றாகும். பயணிகளின் வசதிக்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளன.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் தினமும் 35 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். இதுதவிர, தாம்பரம்-கடற்கரை மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் 250 மின்சார ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக செல்லும். இங்கு தினமும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் வந்து செல்வார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, மின்சார ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சென்னை எழும்பூர் ரெயில்நிலையம் நேற்று 113-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை ரெயில்வே ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெயில்வே மூத்த ஊழியரும், நிலையத்தின் வணிகப்பிரிவு ஊழியருமான பி.முனுசாமி கேக்கை வெட்டினார். எழும்பூர் ரெயில் நிலையத்தின் இயக்குனர் ஜெயவெங்கடேசன் உள்பட ரெயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.

Next Story