50 ஆண்டுகளாக வயல்வெளி மீது பிணங்களை எடுத்துச் செல்லும் அவலம் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கிராமமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, 50 ஆண்டுகளாக வயல்வெளி மீது பிணங்களை எடுத்துச் செல்லும் அவலம் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள நந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புதுச்சேரியில் சுமார் 350 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக கிராம எல்லையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சுடுகாடு உள்ளது.
கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் இந்த சுடுகாட்டில்தான் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு கிலோ மீட்டருக்கு இருந்த மயான பாதையை கிராமத்தை சேர்ந்த பலர் ஆக்கிரமித்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் யாராவது உயிர் இழந்தால் பிணங்களை வயல்வெளிகள் மீது எடுத்துச் செல்லும் அவலம் சுமார் 50 வருடங்களாக நடைபெற்று வருகிறது. சில சந்தர்ப்பங்களில் பிணங்களை வயல்வெளியில் எடுத்து செல்லும்போது விவசாயிகளுடன் தகராறு ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க சுடுகாட்டுக்கு பாதை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் மற்றும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சுடுகாட்டுக்கு பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Related Tags :
Next Story