துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்


துணை நடிகையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2021 6:39 AM GMT (Updated: 15 Jun 2021 6:39 AM GMT)

வீடு புகுந்து தன்னையும், மகனையும் அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்த துணை நடிகையை கண்டித்து அவரது வீட்டின் அருகே பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி லட்சுமி. சினிமா துணை நடிகையான இவர், ‘ஒரு குப்பையின் கதை’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவரது வீட்டின் எதிரே உள்ள வீட்டின் கேட் ஏறி குதித்த வாலிபர்கள் சிலர் அங்கு நின்ற புறாவை பிடிக்க முயன்றனர். இதனை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.

அப்போது மர்மநபர்கள் வீடு புகுந்து தன்னையும், தனது மகனையும் அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக வளசரவாக்கம் போலீசில் பாண்டி லட்சுமி புகார் அளித்தார். எதிர்தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்பேரில் இருதரப்பினர் மீதும் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை நடிகை பாண்டி லட்சுமியை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர், அவரது வீட்டின் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

துணை நடிகை பாண்டி லட்சுமி இந்த பகுதியில் பொதுமக்கள் யாராவது சிறிதுநேரம் நின்றாலோ, மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி பேசினாலோ செல்போனில் படம் பிடித்து போலீசாரிடம் புகார் அளித்து விடுவார். கடை வைத்திருப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அவரால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இதுகுறித்து துணை நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வளசரவாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Next Story