தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளராக சாருஸ்ரீ பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளராக சாருஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையாளராக சாருஸ்ரீ நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக இருந்த சரண்யா அரி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சாருஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்த அவரை மாநகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 20-வது ஆணையாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்ற போதிலும் பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மக்களுக்கு மருத்துவரீதியாக தேவைப்படும் உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் நிச்சயம் செய்யும். அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் அதிக கவனம் செலுத்தப்படும். அதுபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக உள்ளது. அதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை வருவதற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாருஸ்ரீ 2015-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி கலெக்டராக பணியாற்றிய அவர் தொடர்ந்து சென்னை வணிகவரி துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.
Related Tags :
Next Story