சுங்கச்சாவடியில் லாரி மோதி நொறுங்கிய கணினி அறை


சுங்கச்சாவடியில் லாரி மோதி நொறுங்கிய கணினி அறை
x
தினத்தந்தி 2 July 2021 2:07 PM GMT (Updated: 2 July 2021 2:13 PM GMT)

கொடைரோடு சுங்கச்சாவடியில் லாரி மோதி கணினி அறை நொறுங்கியது.

கொடைரோடு :
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் சாலையின் இருபுறங்களிலும் தலா 5 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த அனைத்து வழித்தடங்களிலும் தானியங்கி கணினி அறைகள் உள்ளன.
நேற்று விளாத்திக்குளத்தில் இருந்து ஒரு லாரி மரக்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை சாத்தூர் தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்த ரவிக்கண்ணன் (வயது 37) என்பவர் ஓட்டினார். வழியில் கொடைரோடு சுங்கச்சாவடி 7-வது வழித்தடத்தில் லாரி வந்தபோது மரக்கறி மூட்டைகள் அருகில் உள்ள கணினி அறை மீது மோதியது. இதில் கணினி அறை முழுவதும் கூண்டோடு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கணினி, கேபிள் வயர்கள் ஆகியவை சேதம் அடைந்தது. சுங்கச்சாவடி ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 
விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story