சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த ரகசிய வாக்குமூலம் ஐகோர்ட்டில் தாக்கல்


சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த ரகசிய வாக்குமூலம் ஐகோர்ட்டில் தாக்கல்
x
தினத்தந்தி 2 July 2021 2:52 PM GMT (Updated: 2 July 2021 2:52 PM GMT)

சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த ரகசிய வாக்குமூலம் ஐகோர்ட்டில் தாக்கல்.

சென்னை,

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபாவையும், அவருக்கு உதவியதாக பக்தை சுஷ்மிதாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி முன்னாள் நிர்வாகி ஜானகி சினிவாசன், பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில், சிவசங்கர் பாபா மீதான வழக்கில் தேவையில்லாமல் தங்களை சேர்த்துள்ளதாக கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ராஜ்திலக், 'பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்" என்று கூறி அதன் நகலை தாக்கல் செய்தார்.

பின்னர், "இந்த விவகாரத்தில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று வாதிட்டார்.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஏ.நடராஜன், ரமேஷ், வக்கீல்கள் எம்.முகமது ரியாஸ், டி.செல்வம் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Next Story