போதுமான அளவு தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி பாதிப்பு


போதுமான அளவு தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 4:49 PM GMT (Updated: 2 July 2021 4:49 PM GMT)

கடைமடை பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் ஏக்கரில் நெல்விதைகள் முளைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேளாங்கண்ணி:
கடைமடை பகுதிகளுக்கு  போதுமான அளவு தண்ணீர் செல்லாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் ஏக்கரில் நெல்விதைகள் முளைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் 16-ந்தேதி காலை தஞ்சாவூர் எல்லையான கல்லணைக்கு வந்தடைந்தது. அங்கிருந்து 16-ந்தேதி டெல்டா பாசனத்திற்காக காவிரி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.  இந்த தண்ணீரை நம்பி நாகை மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்வதில் மும்முரம் காட்டி வந்தனர். ஆனால் நாகை பகுதியில் உள்ள வெள்ளையாற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு போதிய அளவு செல்லவில்லை. இதனால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நெல் விதைகள் முளைக்கவில்லை 

கடைமடை பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீர் வராததால்  கீழையூர், திருப்பூண்டி, ஈசனூர், வெண்மணிச்சேரி, மேலப்பிடாகை, கருங்கண்ணி, சோழவித்யாபுரம், திருமணங்குடி, சித்தாய்மூர், கீரம்பேர் எட்டுக்குடி, திருவாய்மூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 7 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெல்விதைகள் முளைக்காமல் உள்ளது.
 உழவு செய்து வயல்களில் தெளித்த நெல் விதைகள் வெயிலில் காய்ந்து முளைப்புத் திறன் குறந்து வீணாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும், காக்கை, குருவிகள் மற்றும் எறும்புகள் உணவிற்காக தின்று விடுகின்றன.

பெரும் நஷ்டம்

கடன் வாங்கி செலவு செய்து நேரடி விதைப்பில் ஈடுபட்ட நிலையில் போதுமான அளவு தண்ணீர் வராததால் உரிய காலத்தில் நெல் விதைகள் முளைக்காததால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே
குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story