கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: கர்நாடக அரசு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கவுரி லங்கேஷ் கொலை வழக்கு: கர்நாடக அரசு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2021 8:43 PM GMT (Updated: 3 July 2021 8:43 PM GMT)

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையை கர்நாடக அரசு நியாயமான முறையில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பெங்களூரு:
  
சுப்ரீம் கோர்ட்டில் மனு

  பெங்களூருவில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி அவரது வீட்டின் முன்பு வைத்து மர்மநபர்கள் சுட்டுக்கொலை செய்தனர். இந்த கொலை குறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு போலீசார், தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியாவை சேர்ந்த மோகன் நாயக் உள்ளிட்ட சிலரை கைது செய்து இருந்தனர்.

  இந்த நிலையில் மோகன் நாயக் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் மோகன் நாயக் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நியாயமான விசாரணை

  இதற்கிடையே கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் சிலரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், நியாயமான முறையில் விசாரணை நடத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கவுரி லங்கேசின் சகோதரி கவிதாவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

  இந்த நிலையில் கவிதா தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கான்வாலிகர், தினேஷ் மகேஸ்வரி, அனிருத் போஸ் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையை யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணியாமல் கர்நாடக அரசு நியாயமான முறையில் நடத்த வேண்டும். மோகன் நாயக்கிற்கு ஜாமீன் வழங்குவது குறித்து கர்நாடக ஐகோர்ட்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினர்.

Next Story