காங்கிரசில் சேர யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம் - மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி


காங்கிரசில் சேர யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம் - மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 July 2021 9:06 PM GMT (Updated: 3 July 2021 9:06 PM GMT)

கட்சியில் இருந்து விலகிய 17 பேர் மட்டுமின்றி காங்கிரசில் சேருவதற்கு யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

  பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கட்சியில் சேர மனு

  காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி சென்ற எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி வேறு யாராக இருந்தாலும் கட்சியில் சேர விரும்பினால், மனு தாக்கல் செய்யலாம். காங்கிரஸ் கட்சியின் கொள்கை, காங்கிரசின் தலைமையை ஏற்றுக் கொள்பவர்கள் யார் வேண்டும் என்றாலும் கட்சியில் சேருவதற்காக மனு அளிக்கலாம். அந்த மனுவை அல்லம் வீரபத்ரப்பாவிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த மனுவை பரிசீலித்து கட்சியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்.

  இவ்வாறு கட்சியில் சேர விரும்புபவர்கள் பற்றி பிளாக் காங்கிரஸ், மாவட்ட தலைவர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும். இந்த விவகாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கட்சியில் சேர விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு, யாரை சேர்ப்பது, நிராகரிப்பது என்பது குறித்து முடிவு செய்யலாம்.

அரசியலில் சகஜம்

  கட்சியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் விதவிதமான கருத்துகள் இருக்கும். ஆனால் ஒட்டு மொத்தமாக கட்சியில் உள்ளவர்களின் கருத்துகள் என்ன? என்பதை அறிந்து, அதற்கு ஏற்றபடியே முடிவு எடுக்க வேண்டும். கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்ந்து மந்திரியாகி உள்ள 17 பேரில், ஒருவர் கூட இதுவரை காங்கிரசில் சேருவதற்காக என்னுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை. அந்த 17 பேர் கட்சியில் சேர வேண்டும் என்பதற்காக, இந்த கருத்தை சொல்லவில்லை. காங்கிரசில் சேர யாருக்கு விருப்பம் இருந்தாலும் மனு தாக்கல் செய்யும்படி தான் கூறுகிறேன்.

  மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டியது மாநில தலைவராகி என்னுடைய பொறுப்பாகும். அரசியலில் முதுகில் குத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து கட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க தான் செய்யும். ஒரு கட்சியில் இருப்பவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வது, மீண்டும் அதே கட்சியில் சேரும் சம்பவங்கள் நடப்பது அரசியலில் சகஜமான ஒன்றாகும்.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story