தலையில் கல் விழுந்து பெண் சாவு

செஞ்சி அருகே கல்குவாரியில் வெடிவைத்து தகர்த்தபோது தலையில் கல் விழுந்து பெண் பலியானார்.
செஞ்சி,
செஞ்சி அருகே பெரும்புகை கிராமத்தில் கல்குவாரி உள்ளது. நேற்று மாலை வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது கல்குவாரியில் இருந்து கற்கள் சிதறின. அந்த சமயத்தில் 500 மீட்டர் தொலையில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊரணி தாங்கள் கிராமத்தை சேர்ந்த சேகர் மனைவி செல்வியின்(வயது 45) தலையில் கல் விழுந்தது. இதில் தலை நசுங்கி செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி அறிந்ததும் செல்வியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். போலீசாரும் விரைந்து வந்து, செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன், செஞ்சி தாசில்தார் ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சக்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், கல் குவாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story