தர்மபுரி மாவட்டத்தில் எக்காரணம் கொண்டும் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து வழங்கக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


தர்மபுரி மாவட்டத்தில் எக்காரணம் கொண்டும் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து வழங்கக்கூடாது அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 July 2021 9:57 PM IST (Updated: 14 July 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் எக்காரணம் கொண்டும் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் எக்காரணம் கொண்டும் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் குறித்த அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, மாவட்ட திட்டக்குழு செயலாளர் மாரிமுத்துராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுரேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள் மற்றும் 251 கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒகேனக்கல் குடிநீருடன் நிலத்தடி நீரை கலந்து பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. ஒகேனக்கல் குடிநீரை ஒருநாளிலும், நிலத்தடி நீரை மற்றொரு நாளிலும் வினியோகம் செய்யவேண்டும்.
தனி கவனம்
ஒரு குறிப்பிட்ட நாளில் வழங்கப்படும் தண்ணீர் ஒகேனக்கல் குடிநீரா? அல்லது நிலத்தடி நீரா? என்பது குறித்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும். பிரதி வாரம் ஒவ்வொரு நாளும் எந்த தண்ணீர் வழங்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை குடிக்கவும், சமைக்கவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நிலத்தடி நீரை குடிப்பவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும் நிலை ஏற்படுவதால் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி பெறாமல் பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை முறைப்படுத்தி உரிய வரியினை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். முன் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகள் இல்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்து பணி
தேவைப்படும் இடங்களில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைத்திட ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுழற்சி அடிப்படையில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊழியர்கள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story