`நீட்' தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் `நீட்' தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சி,
தமிழகத்தில் `நீட்' தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
‘நீட்’ தேர்வுக்கு விலக்கு
நீட் தேர்வு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.`நீட்' தேர்வுக்கு விலக்கு என்பது தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு.
இதற்காக சட்டப்போராட்டம் நடத்தப்படும். நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றே தீருவோம். இந்தநிலையில் தேர்வை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பது கவலை அளிக்கிறது.
மாணவா் சேர்க்கை
ஆனால் தேர்வுக்கு தயாராகும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இந்தாண்டு தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அது விரைவில் தீர்க்கப்படும்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து கல்வி பயிலும் மாணவர்களுக்காக தீக்ஷா ஆப் வசதி உள்ளது. பாடப்புத்தகங்களில் கியூஆர் கோடு உள்ளது. இதை வைத்து மாணவர்கள் படித்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story