அணையின் நீர்மட்டம்


அணையின் நீர்மட்டம்
x
தினத்தந்தி 16 July 2021 10:07 PM IST (Updated: 16 July 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீர்மட்டம் 3 நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தளி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீர்மட்டம் 3 நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அமராவதி அணை
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு மற்றும் துணைஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவும் அதிகரித்து உள்ளது. 
7 அடி உயர்வு 
அதன்படி கடந்த 13ந் தேதி காலை 66.24 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 73.23 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்இருப்பு மூன்று நாட்களில் 6.99 அடி உயர்ந்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,770 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 

Next Story