திருவாரூரில் அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திருவாரூரில் அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2021 11:32 AM IST (Updated: 19 July 2021 11:32 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர், 

தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய ஆன்மிக தலங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் வழியாக செல்கிறது. இதனால் தினசரி வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் திருவாரூர் நகர் பகுதி வழியாக தான் செல்ல வேண்டும்.

மேலும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து ஏராளமான கனரக வாகனங்களில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களை ஏற்றி கொண்டு கேரளா செல்லும் வாகனம் என நாள்தோறும் திருவாரூர் பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தண்டலை, காட்டூர், சேந்தமங்கலம் வழியாக கிடாரங்கொண்டான் வரை அரைவட்ட புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் ஆர்ஜிதப்படுத்தபடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதனைதொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிலையில் பல்வேறு காரணங்களால் அரை வட்ட புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருவாரூர் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மயிலாடுதுறை, காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்து நகர் பகுதிக்குள் புகுந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ளதால் திருவாரூர் அரைவட்ட புறவழிச்சாலை திட்ட பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி விரைந்து முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்து வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 More update

Next Story