அஞ்செட்டியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது


அஞ்செட்டியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 5:13 PM GMT (Updated: 27 July 2021 5:19 PM GMT)

அஞ்செட்டியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 35). இவர் தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார். ஆனால் நீண்ட நாட்களாக பட்டா மாற்றம் செய்யாமல் அஞ்செட்டி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் (28) இழுத்தடித்து வந்தார்.

இது குறித்து அவரிடம் சென்று பாக்கியராஜ் கேட்ட போது ரூ.4 ஆயிரம் தந்தால் தான், பட்டா மாற்றம் செய்து கொடுக்க முடியும் என கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாக்கியராஜ் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி பாக்கியராஜ், ரசாயன பவுடர் தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் லஞ்ச பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்து இருந்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story