ஆந்திராவில் இருந்து காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மேல்விஷாரத்தில் மீட்பு

காரில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மேல்விஷாரத்தில் மீட்பு
ஆற்காடு
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆளூர் மண்டலம் குருனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 32) தொழிலதிபரான இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரலுவை ஒரு கும்பல் ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி ராணிப்பேட்டை பகுதிக்கு வந்ததாக ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வெங்கடேஸ்வரலு செல்போன் சிக்னலை வைத்து போலீசார் தேடி வந்தனர். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே இருப்பதாக செல்போன் சிக்னலில் தெரியவந்தது. இதனையடுத்து விஷாரம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் வெங்கடேஷ்வரலு காரில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் மீட்டனர். மேலும் காரில் இருந்த ஆம்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராணிப்பேட்டையை அடுத்த தென்நந்தியாலம் பகுதியைச் சேர்ந்த அருண் ஆகியோரை பிடித்து ஆற்காடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் செல்போன் டவர் அமைப்பதில் வெங்கடேஷ்வரலு ரூ.40 லட்சம் வாங்கிக்கொண்டு பலரிடம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story