கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகரில் இருந்து பழனி செல்லும் மலைப்பாதையில் பெருமாள் மலை அருகே ஆனைகிரி சோலை உள்ளது. இங்கு சாலையோரத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. மழைக்காலத்திலும், சூறைக்காற்று வீசும்போதும் இங்கு அடிக்கடி மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் அப்பகுதியில் ரோட்டோரம் நின்ற பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதற்கு ஒருசில வினாடிகளுக்கு முன்புதான் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருடைய கார் அந்த இடத்தை கடந்தது. இதனால் காரில் வந்த 3 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன் காரணமாக சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே அங்கு ரோட்டோரம் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் நிற்கும் 10-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story