ஜனாதிபதி வருகை எதிரொலி: தலைமைச்செயலக ஊழியர்கள் முன்கூட்டியே செல்லலாம்


ஜனாதிபதி வருகை எதிரொலி: தலைமைச்செயலக ஊழியர்கள் முன்கூட்டியே செல்லலாம்
x
தினத்தந்தி 1 Aug 2021 10:16 AM GMT (Updated: 1 Aug 2021 10:16 AM GMT)

ஜனாதிபதி வருகை எதிரொலி: தலைமைச்செயலக ஊழியர்கள் முன்கூட்டியே செல்லலாம் தலைமைச்செயலாளர் உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் படத் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை அரங்கத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு விழாக்களுக்கான ஏற்பாடுகளை சட்டசபை செயலகம் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை முன்வைத்து தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

மேலும் தலைமைச்செயலக பிரதான கட்டிடத்தின் முகப்பு முழுவதும் ‘சீரியல்’ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், தமிழக சட்டசபை அரங்கத்தில் நாளை நடக்கும் விழாக்களில் தலைமை விருந்தினராக பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிறார்.

எனவே தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் அன்று பிற்பகல் 1 மணிக்கே தங்களின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story