விழுப்புரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு வாகனம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒருபகுதியாக 1-ந்தேதி(நேற்று முதல்) வருகிற 7-ந்தேதி வரை ஒரு வாரத்துக்கு கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது, தடுப்பூசிபோட்டுக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
விழிப்புணர்வு வாகனம்
தொடர்ந்து விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழுப்புரம் நகராட்சி பூந்தோட்டம் குளத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மலர்களால் வரையப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) ரூபினா, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story