அன்னவாசலில் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மதுப்பிரியர்கள் மனு


அன்னவாசலில் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மதுப்பிரியர்கள் மனு
x
தினத்தந்தி 16 Aug 2021 5:59 PM GMT (Updated: 16 Aug 2021 5:59 PM GMT)

அன்னவாசலில் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மதுப்பிரியர்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை:
டாஸ்மாக் கடை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள், வாலிபர்கள் மற்றும் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ``கடந்த 6 ஆண்டுகளாக அன்னவாசலில் டாஸ்மாக் கடை இல்லாததால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுப்பிரியர்கள் மது குடித்து வர வேண்டியிருந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த போது விபத்துகள் பல நடைபெற்றன.
தற்போது அன்னவாசலில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் எங்களுக்கு வீண் அலைச்சல் இல்லை. போலி மதுபானம் விற்பவர்களிடமும், வெளி ஊர்களில் இருந்து டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்களிடமும் நாங்கள் மதுவாங்க வேண்டியதில்லை. அன்னவாசலில் தற்போது அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு சிலர் சுய லாபத்திற்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே அன்னவாசலில் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
நெல் கொள்முதல் நிலையம்
இதேபோல அரிமளம் ஒன்றிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அரிமளம் ஒன்றியம், சத்திரம் கிராமத்தில் இயங்கி வந்த நெல் கொள்முதல் நிலையம் கடந்த 1-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. மழைக்காலம் தொடங்கி விட்டால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும். எனவே நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (செவ்வாய்க்கிழமை) சத்திரம் கிராமத்தில் சாலை மறியல் செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கலெக்டர் அலுவலகத்திலும், நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியிலும் அளித்தனர்.

Next Story