ஆரோவில் வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.4 லட்சம் மோசடி; 2 பேர் கைது

ஆரோவில் வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.4 லட்சம் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே இடையன்சாவடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 42), முந்திரி வியாபாரி. இவர் முந்திரி பருப்பு வாங்கி சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு அனுப்பி வந்தார்.
இந்நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியின் உரிமையாளர்களான ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் (39), சூரம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) ஆகியோர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு முந்திரி பருப்பு கேட்டுள்ளனர்.
ரூ.4 லட்சம் மோசடி
இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்த அவர்கள் இருவரும் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்திற்கு முந்திரி பருப்பு வாங்கினர். அதற்காக ரூ.1 லட்சம் கொடுத்தனர்.
மேலும் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்தை தங்கள் கம்பெனி பெயரில் உள்ள நிதி நிறுவனத்தின் காசோலையாக கொடுத்தனர். மீதி ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்தை விஜயகுமாரின் வங்கி கணக்கில் இருந்து அனுப்புவதாக கூறிச்சென்றனர்.
அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அந்த காசோலையை, ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பியது. இதுகுறித்து ராதாகிருஷ்ணன், பணம் கேட்டபோது கோவிந்தராஜ், தான் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியில் ஈரோடு தலைவராகவும், விஜயகுமார் மாநில துணை செயலாளராகவும் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளனர்.
2 பேர் கைது
இதுபற்றி ராதாகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவீந்திரன், இருதயராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், ஈரோட்டுக்கு விரைந்து சென்று விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் போலீசார், வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.
மேலும் முந்திரி, பருப்பு, புளி, பூண்டு, பாக்கு, மணிலா பயிறு, சீரகம், மஞ்சள், துணி, ஆயில் போன்றவற்றை கொள்முதல் செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்தால் அது உண்மையான கம்பெனிதானா என ஆராய்ந்து வியாபாரம் செய்யவும், இதுபோல் மோசடி ஆசாமிகள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story