விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தகவல்


விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தகவல்
x
தினத்தந்தி 9 Sep 2021 7:03 PM GMT (Updated: 9 Sep 2021 7:03 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தெரிவித்தார்.

கடலூர், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க இந்த விழாவை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

குறிப்பாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது. ஊர்வலமாக செல்லக்கூடாது என பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்திலும் இந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் ஏற்கனவே அறிவித்து உள்ளார். விதிமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

நடவடிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு சில விதிமுறைகளை தெரிவித்து உள்ளது. இதை கடலூர் மாவட்ட மக்கள் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது. 

வீட்டுக்குள் வைத்து வழிபடலாம். ஆனால் வீட்டுக்கு வெளியே விநாயகர் சிலைகளை வைத்து வழிபடக்கூடாது. சிலைகளை தனிநபர்கள் மட்டும் எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம். ஊர்வலமாக சிலைகளை கொண்டு செல்லக்கூடாது. இது பற்றி 7 உட்கோட்டங்களிலும் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

 அதேபோல் சிறுவர்கள், முதியவர்கள் நீர் நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரசு விதித்துள்ள நடைமுறைகளை மீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு


இதற்காக 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தாலுகா போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

ஊர்க்காவல் படையினரும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை முதல் இரவு வரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பல்வேறு இடங்களுக்கு சென்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.


Next Story