தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘புகார் பெட்டி’க்கு நன்றி
திருச்சி மலைக்கோட்டை மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவில் சாலையின் நடுவில் அமைந்துள்ள பாதாளசாக்கடையின் மேல் மூடி பழுதடைந்து பள்ளமாக இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி புகார் பெட்டி’யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இதனை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுவாமிநாதன், திருச்சி.
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தாலுகா முத்தரசநல்லூர் ஊராட்சியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி புகார் பெட்டி’யில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து தற்போது மின்வெட்டு ஏற்படவில்லை. எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முத்தரசநல்லூர், திருச்சி.
வேகத்தடை அமைக்க வேண்டும்
திருச்சி மாநகராட்சி உறையூர் 58, 59-வது வார்டுகள் சந்திப்பு டாக்கர் ரோடு, நாச்சியார் ரோடு, பெரிய சவுராஷ்டா சாலை ஆகிய 3 ரோடுகள் சந்திப்பில் செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகில் பள்ளி இருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சாலையை கடக்க சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரா.ஆனந்தன் , திருச்சி.
பழுதடைந்த சாலையால் அவதி
திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் பஞ்சாயத்து, கூத்தூர் வழி பிச்சாண்டார் கோவில் ரெயில் நிலைய தார் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் இரவில் செல்லும் பெண்கள் அச்சமடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்பிரமணியம், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா அட்டாளப்பட்டி கிராமத்தில் இருந்து முசிறி செல்லும் தார்சாலை அந்தரப்பட்டி வரை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்பொழுது பள்ளி திறந்து உள்ளதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் எங்களது கிராமத்தில் பொது மயான கொட்டகை மற்றும் ஆதிதிராவிடர் மயான கொட்டகை இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதி, திருச்சி.
அபாயகரமான மின்கம்பம் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தாலுகா எதுமலை ரோடு அய்யனாபுரம் காலனியில் அபாயகரமான நிலையில் மின்கம்பம் உள்ளது. பலத்த காற்று வீசினால் இந்த மின் கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.
விஜய் மாணிக்கம், திருச்சி.
குப்பைகளால் சுகாதார கேடு
திருச்சி மாவட்டம், மேற்கு தொகுதி, 52 வார்டு, 9-வது குறுக்கு தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது. பிறகு அந்த குப்பைகளை அகற்றாமல் நடைபாதையில் போட்டுவிட்டு சென்று உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கொசு தொல்லையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், கொசு மருந்தையும் தெளிக்க வேண்டும்.
வெங்கடேஷ்வரன், திருச்சி.
குரங்குகள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா திருவெள்ளறை பெருமாள் கோவில் அருகில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.
திசைகாட்டி பலகை அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கல்லுப்பட்டியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை 38-ல் மதுரை மார்க்கத்தில் ஒரு பஸ் நிறுத்தம், திருச்சி மார்க்கத்தில் ஒரு பஸ் நிறுத்தம் என 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் திருச்சி மார்க்கத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் "கல்லுப்பட்டி" என்ற ஊர் பலகை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இல்லாமல் உள்ளது. மேலும் கல்லுப்பட்டிக்கு மேற்கேயுள்ள முக்கிய ஊர்களான மருங்காபுரி -3 கி.மீ., புத்தாநத்தம் 10 கி.மீ. என்ற திசைகாட்டி பலகையும், கிழக்கேயுள்ள தெ.இடையப்பட்டி - 2 கி.மீ., பாலக்குறிச்சி -9 கி.மீ. என்ற திசைக்காட்டி பலகையும் இல்லாமல் உள்ளது. எனவே கல்லுப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் பிரிவு சாலையில் ஊர் பெயர்பலகை மற்றும் திசைகாட்டி பலகை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்கட், திருச்சி.
Related Tags :
Next Story