திருநாவலூர் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் திடீர் முற்றுகை

ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் திடீரென முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
ஊராட்சி மன்ற தலைவர்
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்பவர் போட்டியிட்டார்.
பின்னர் வாக்கு எண்ணிக்கையின் போது முதலில் அம்பிகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் அந்த இடத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.
முற்றுகை
இந்த நிலையில் தனது வெற்றியை வேண்டுமென்றே அதிகாரிகள் வேறு ஒரு நபருக்காக மூடிமறைத்து ஏமாற்றுவதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்ட அம்பிகா, தனது கணவர் மற்றும் கிராம மக்களுடன் நேற்று திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல்அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story