ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல்


ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல்
x
தினத்தந்தி 21 Oct 2021 6:40 PM GMT (Updated: 21 Oct 2021 6:40 PM GMT)

ஊராட்சி மன்ற துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.

அரியலூர், 
தற்செயல் தேர்தல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இறப்பு காரணமாக வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சி 6-வது வார்டு, வாலிகண்டபுரம் ஊராட்சி 7-வது வார்டு, வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆடுதுறை 4-வது வார்டு என 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கடந்த 9-ந்தேதி தற்செயல் தேர்தல் நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
துணைத்தலைவர் பதவி
இந்தநிலையில் ஆடுதுறை ஊராட்சியில் துணைத்தலைவர் பதவியிடம் காலியாக உள்ளது. துணைத்தலைவர் பதவியை தேர்ந்தெடுக்க ஆடுதுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது. மறைமுக தேர்தலில் ஆடுதுறை ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் வாக்கு அளிக்க உள்ளனர்.
சமமாக வாக்குகள் விழுந்தால் குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மறைமுக தேர்தலில் வெற்றி பெறுபவர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பதவி ஏற்பார்.
அரியலூர்
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட ஓலையூர், தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட நாயகனைப்பிரியாள், மணகெதி ஆகிய 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், அரியலூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஒட்டக்கோவில் 6-வது வார்டு, திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெற்றியூர் 6-வது வார்டு, கோவிலூர் 1-வது வார்டு, செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட தளவாய் 9-வது வார்டு, சிறுகடம்பூர் 3-வது வார்டு, ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜெ.தத்தனூர் 5-வது வார்டு, ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட இடையக்குறிச்சி 2-வது வார்டு, இலையூர் 9-வது வார்டு, தா.பழூர் ஒன்றியத்துக்குட்பட்ட அம்பாபூர் 8-வது வார்டு ஆகிய 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் பதவி ஏற்று கொண்டனர்.
மறைமுக தோ்தல்
இதில் சிறுகடம்பூர், உட்கோட்டை, ஒட்டக்கோவில் ஆகிய ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தோ்தல் இன்று காலை 10 மணியளவில் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் சிறுகடம்பூர் ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்களும், உட்கோட்டை ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்களும், ஒட்டக்கோவில் ஊராட்சியில் 9 பேரும் வாக்களிக்க உள்ளனர். மேலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் வாக்களிக்க உள்ளனர். 
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சமமாக வாக்குகள் விழுந்தால் குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மறைமுக தேர்தலில் வெற்றி பெறுபவர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பதவி ஏற்பார்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மறைமுக தேர்தல் நடைபெறும் இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த ேபாலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story