தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்


தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 23 Oct 2021 10:30 PM IST (Updated: 23 Oct 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
அதன்படி நேற்று தூத்துக்குடி 3-வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இந்த முகாமில் ஏராளமான போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு மாற்று வழி தடுப்பூசிதான். இந்த தடுப்பூசி தான் நம்மை பாதுகாக்கும் கவசம். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பது அரசின் நோக்கம். தடுப்பூசி போட்டவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக கொரோனா தொற்று வருவதில்லை. அவ்வாறு தடுப்பூசி போட்டவர்களுக்கு வந்தால் கூட உயிரிழப்பு ஏற்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடாத அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் காவல்துறையினர் பல்வேறு பணிகள் காரணமாக பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இருக்க முடியாத சூழல் உள்ளது. எனவே நாம் பண்டிகை காலங்களில் கூட குடும்பத்துடன் இருக்க முடியவில்லையே என்று எண்ணி உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க இங்கு நடக்கும் மனஅழுத்த பயிற்சி முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டு இளங்கோவன், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிகன்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story