கொரோனாவால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி


கொரோனாவால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி
x
தினத்தந்தி 30 Oct 2021 11:26 PM IST (Updated: 30 Oct 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 35 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிக்கான காசோலைகளை வழங்கினர். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறும் திட்டத்தில் மொத்தம் 1,450 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 38 நோய் பரிசோதனைகளும் அதோடு தொடர்புடைய 154 தொடர் சிகிச்சை முறைகளும், 8 உயர் அறுவை சிகிச்சை முறைகளையும் பெறும் இத்திட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் இணைக்கப்பட்டு 3 ஆண்டு காலம் நிறைவு பெறுவதை முன்னிட்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையையும் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டி.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கணேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் இளங்கோவன், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story