சாலை தடுப்புச்சுவரை லாவகமாக கடந்த ஆம்புலன்ஸ்

விபத்தில் காயமடைந்தவரை மீட்டு செல்லும்போது சாலை தடுப்புச்சுவரை லாவகமாக கடந்து ஆஸ்பத்திரியில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
புதுச்சேரி, நவ.1-
விபத்தில் காயமடைந்தவரை மீட்டு செல்லும்போது சாலை தடுப்புச்சுவரை லாவகமாக கடந்து ஆஸ்பத்திரியில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
போக்குவரத்து நெரிசல்
கடலூர் சாலை மார்க்கத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த நபருக்கு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து அந்த நபரை மேல்சிகிச்சைக்காக ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் புதுச்சேரி நோக்கி வேகமாக வந்தது. 100 அடி சாலையில் இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் வரை சாலையின் ஒருபக்கம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்சும் சிக்கிக்கொண்டது. ஆம்புலன்சில் இருப்பவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நிலையில், அதன் டிரைவர் மேம்பால சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பில் ஏறி மறுபக்கம் வழியாக செல்ல திட்டமிட்டார்.
தடுப்புச்சுவரை கடந்து சென்றது
அதன்படி அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் சக்கரம் ஏறும் வகையில் சிறிய கற்களை தடுப்புச்சுவர் ஒட்டியவாறு வைத்தனர். அதன் மீது ஆம்புலன்சை ஏற்றி லாவகமாக மறுபக்கம் கடந்து மருத்துவமனைக்கு சென்றது. பின்னர் காயமடைந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story