தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 7 Nov 2021 12:03 AM IST (Updated: 7 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை அதிகாரிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை அதிகாரிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
ஒத்திகை நிகழ்ச்சி
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் திவ்யதர்சினி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் செந்தில்குமார், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையில் தீயணைப்பு படை வீரர்கள் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத தீவிபத்துக்களின்போது தீயை அணைக்கும் முறை, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முறை குறித்து செயல்விளக்கத்துடன் ஒத்திகை நடத்தப்பட்டது. மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள், அதிநவீன கருவிகள், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான ஜாக்கெட்டுகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு 
பேரிடர் காலங்களில் தர்மபுரி கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை துறையை 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கால அவசர சிறப்பு தொலைபேசி எண் 112-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், உதவி கலெக்டர் (பயிற்சி) கவுரவ் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், பேரிடர் மேலாண்மை துறை தனி தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Next Story