தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Nov 2021 3:53 PM GMT (Updated: 7 Nov 2021 3:53 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி 

பாளையங்கோட்டை அரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரமணி. இவர், அரியகுளம் குளக்கரையில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் திருமலைகொழுந்துபுரம் நீரேற்றும் நிலையத்தில் மின்மோட்டாா் பழுது காரணமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து மின்மோட்டாரை உடனடியாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அந்த மின்மோட்டார் பழுது நீக்கப்பட்டு, குடிநீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

பழுதடைந்த பாலம்

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து ராமன்குடி செல்லும் சாலையில் நம்பியாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் தற்போது பழுதடைந்த நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தோணி பிச்சை, தோப்புவிளை. 

சாலையோரம் கொட்டப்படும் குப்பை 

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெயில்வே கேட் என்.எச். காலனி அருகில் சாலையோரத்தில் 5 இடங்களில் பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டிச் செல்கிறார்கள். அவற்றுக்கு சிலர் அவ்வப்போது தீவைத்தும் செல்கிறார்கள். மேலும் மழைக்காலங்களில் இந்த பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அதேபோல் இந்த பகுதியில் மின்கம்பங்கள் ஒன்றும் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரவில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து, மின்கம்பங்கள் அமைத்தால் நன்றாக இருக்கும்.
மருதநாயகம், பெருமாள்புரம்.

மரக்கிளை அப்புறப்படுத்தப்படுமா?

தென்காசி மாவட்டம் கடையம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மெயின் ரோடு வரை மின்சார கம்பியில் மரக்கிளை உரசி செல்கிறது. அந்த பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே மின்சார கம்பியில் உரசி செல்லும் மரக்கிளைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கண்ணன், கேளையாபிள்ளையூர்.

போக்குவரத்திற்கு இடையூறு

அம்பை-தென்காசி மெயின் ரோட்டில் ஆம்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. அந்த வளைவு பகுதியில் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் எதிரே பெரிய வாகனங்கள் வரும்போது பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் ஒதுங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் பஸ்களில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் முட்செடிகள் குத்தி காயம் அடைகிறார்கள். எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி, சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சீைமக்கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அம்ஜத், முதலியார்பட்டி.

தேங்கி நிற்கும் சாக்கடைநீர்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு புதுக்கிராமம் பாரதியார் தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வாறுகாலில் வாட்டம் சரிஇல்லாததால் சாக்கடைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?
ரெங்கநாதன், முறப்பநாடு.

புகாருக்கு உடனடி தீர்வு

சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை பஞ்சாயத்து வடக்கு பன்னம்பாறை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கோமதி நாயகம். இவர் சமீபத்தில் பெய்த மழையால் தெருவில் மழைநீர் தேங்கி கிடப்பதாகவும், அதில் சரள் மண் போட்டு மழைநீரை வடிய வைக்க வேண்டும் எனவும் தினத்தந்தி புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 6-ந் தேதி செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் உடனடியாக சரள் மண் போட்டு மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

கம்பி வேலி அமைக்க வேண்டும்

தூத்துக்குடி சிவந்தாகுளம் தெரு பகுதியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியையொட்டி ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி மின்மாற்றியை இடித்துவிட்டு செல்லும் அவலம் உள்ளது. இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்பட வாய்ப்பும் உள்ளது. ஆகவே மின்மாற்றியை சுற்றி கம்பி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், தூத்துக்குடி. 

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

கோவில்பட்டி புதுரோட்டில் இருபுறமும் கடைகள் அதிகம் உள்ளது. இதில் ஒரு சில கடைகளில் கொட்டகை அமைத்து சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அங்கு விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுகிறேன்.
தங்கப்பாண்டியன், கோவில்பட்டி.

Next Story