நாமக்கல் மாவட்டம் முழுவதும் 740 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 740 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 740 மையங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
மெகா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 13,84,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 9,61,521 நபர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4,23,353 நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.
இந்த மாவட்டத்தில் இதுவரை நடந்த 7 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 3,50,774 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் 8-ம் கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 666 நிலையான முகாம்கள் மூலமாகவும், 74 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் ஆக மொத்தம் 740 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு
இந்த முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
கொரோனா நோய் தொற்றானது முற்றிலும் ஒழியவில்லை. தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story