தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்


தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்
x
தினத்தந்தி 23 Nov 2021 6:37 PM IST (Updated: 23 Nov 2021 6:37 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர்
தூத்துக்குடி செல்சீனி காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் சாரதி என்ற பார்த்தசாரதி (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய நண்பர் தூத்துக்குடி சக்திநகர் 2-வது தெருவை சேர்ந்த அந்தோணி மகன் பால்ராஜ் (28). இவரும் ஆட்டோ டிரைவராக உள்ளார்.
இந்த நிலையில் பால்ராஜிக்கும், செல்சீனி காலனியை சேர்ந்த மாரிமுத்து மனைவி லட்சுமி என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்கள் வீட்டைவிட்டு சென்று விட்டனர். இதுதொடர்பாக மாரிமுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில், தனது மனைவி பால்ராஜ் உடன் சென்றதற்கு பார்த்தசாரதி உடந்தையாக இருந்ததாக மாரிமுத்து கருதினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, அவரது மைத்துனர் கார்த்திக் (20) ஆகியோர் நேற்று மாலை 3.30 மணியளவில் செல்சீனி காலனிக்கு சென்றனர். அங்கிருந்த பார்த்தசாரதியை அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனடியாக அவர் அங்கிருந்து ஓடினார்.
ஆனால் அவர்கள் 2 பேரும் விரட்டி சென்று பார்த்தசாரதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். 
2 பேருக்கு வலைவீச்சு 
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பார்த்தசாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story