இறந்த கணவரின் சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தை கேட்டு வங்கி முன்பு மூதாட்டி தர்ணா

இறந்த கணவரின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை கேட்டு வங்கி முன்பு 95 வயது மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வேதாரண்யம்:
இறந்த கணவரின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை கேட்டு வங்கி முன்பு 95 வயது மூதாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேமிப்பு கணக்கில் பணம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னம்புலத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி காத்தாயி(வயது 95). இவர்களுக்கு 7 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்து விட்டார். ராமலிங்கம் இறப்பதற்கு முன்பு கரியாப்பட்டினத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கில் பணம் வைத்திருந்தார்.
வாரிசுதாரர் நியமிக்கவில்லை
தனது கணவர் சேமித்து வைத்து இருந்த பணத்தை எடுப்பதற்காக மூதாட்டி காத்தாயி வங்கிக்கு சென்று மனு கொடுத்துள்ளார். அப்போதுதான் ராமலிங்கம் வங்கியில் தனது கணக்கில் சேமித்து வைத்திருந்த பணத்துக்கு வாரிசுதாரர் நியமிக்காமல் இருந்தது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து மூதாட்டியிடம் வங்கி அதிகாரிகள், வாரிசு சான்று மற்றும் நோட்டரி வக்கீல் கையொப்பம் பெற்று வந்தால்தான் பணம் கொடுக்க முடியும் என கூறியுள்ளனர்.
சான்று வழங்க மறுப்பு
இதனைத்தொடர்ந்து மூதாட்டி வாரிசு சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அதிகாரி காத்தாயியிடம் உங்களது மகன்களில் ஒருவர், வாரிசு சான்று கொடுக்க கூடாது என எனக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
எனவே நான் உங்களுக்கு வாரிசு சான்றிதழ் தர முடியாது என்று கூறி வாரிசு சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மூதாட்டி தர்ணா
இதனையடுத்து நேற்று மீண்டும் அந்த வங்கிக்கு வந்த மூதாட்டி வங்கி மேலாளரிடம், தனது கணவர் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு வங்கி மேலாளர், உரிய ஆவணங்கள் கொடுத்தால்தான் பணம் வழங்கப்படும் என கூறியுள்ளார். இதனால் அந்த மூதாட்டி வங்கியிலேய 3 மணி நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் வங்கி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியிடம், வங்கி ஊழியர்கள் உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு மூதாட்டிக்கு அறிவுரை வழங்கினர். இதனால் வேறுவழியின்றி 3 மணி நேரத்திற்கு பிறகு தனது போராட்டத்தை கைவிட்டு காத்தாயி அங்கிருந்து சென்றார்.
அதிகாரிகளுக்கு கோரிக்கை
வயதான காலத்தில் தனது கணவர் சேமித்து வைத்திருந்த பணத்தை பெற முடியாமல் வங்கியில் 3 மணி நேரம் மூதாட்டி காத்திருந்ததை பார்த்து வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் வேதனை அடைந்தனர்.
தனது வயதை கருத்தில் கொண்டு தனது கணவர் சேமித்து வைத்த பணத்தை வழங்க வங்கி அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என்று அந்த மூதாட்டி கோரிக்கை விடுத்தார்.
Related Tags :
Next Story