கண்டாச்சிபுரம் அருகே பூட்டிய அறைக்குள் பிணமாக கிடந்த ஆசிரியர் காரணம் என்ன? போலீசார் விசாரணை

கண்டாச்சிபுரம் அருகே பூட்டிய அறைக்குள் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் அகஸ்டின் (வயது 36). இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கணக்கன்குப்பத்தில் உள்ள லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில், கடந்த 4 ஆண்டுகளாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரது குடியிருப்பு கதவின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தனர்.
அப்போது, வீட்டின் உள்ளே உள்ள கழிவறையில் ஆசிரியர் அகஸ்டின் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காரணம் என்ன?
இது தொடர்பாக பள்ளிதலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆசிரியர் அகஸ்டின் சர்க்கரை மற்றும் உயர் ரத்த கொதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதற்கு மருந்து மாத்திரை எடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக, அவர் மயங்கி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story