நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகள் நிறைவு அடைந்து உள்ளன


நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகள் நிறைவு அடைந்து உள்ளன
x
தினத்தந்தி 11 Dec 2021 8:37 PM IST (Updated: 11 Dec 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகள் நிறைவு அடைந்து உள்ளன

முத்தூர், 
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக முழுவீச்சில் நடைபெற்ற நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகள் நிறைவு அடைந்து உள்ளன.
நஞ்சை சம்பா நெல் சாகுபடி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன்வலசு, ராசாத்தாவலசு, மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன.
இதன்படி முதல் கட்டமாக கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ 41,கோ 43, டீலக்ஸ் பொன்னி உள்பட பல்வேறு ரக விதை நெல் மணிகளை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து தங்களதுவயல்களில் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்தனர்.
நெல் நடவு பணிகள்:
இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக நன்கு வளர்ந்து இருந்த நெல் நாற்றுக்கள் வயல்களில் இருந்து எடுக்கப்பட்டு சமன்படுத்தப்பட்ட தண்ணீர் நிரம்பிய வயல்களில் இயற்கை தொழு உரங்கள், மாற்று உரங்கள் இட்டு டிராக்டர் மூலம் சேற்று உழவு பணிகள் செய்யப்பட்டது. பின்பு இப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக நெல் நடவு எந்திரம் மற்றும் உள்ளூர், வெளி மாவட்ட கூலி ஆட்கள் மூலம் நெல் நடவு பணிகள் தொடங்கப்பட்டன. 
இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று தற்போது முற்றிலும் நிறைவு அடைந்து உள்ளன. இதனால் முத்தூர் சுற்று வட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்றுக்கள் நன்கு வளர்ந்து பச்சை, பசேல் என்று பசுமையாய் காட்சி அளிக்கின்றன. 

Next Story